ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலமாக பாரளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களைத்தான் மூலம் அரசாங்க பக்கமாக மாறியிருந்தார்கள். அண்மைய அரச சிக்கல்களின் போது அரசாங்கத்தை விட்டு வெளியேறியிருந்தார்கள். அந்த நால்வரும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்துள்ளனர்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.எஸ்.தௌபீக், பைசல் காசிம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஷாக் ரஹுமான் ஆகியோர் இன்று (14.05) ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் முகமாக ஐக்கிய மக்கள் சக்திக்கு தங்கள் ஆதரவை வழங்குவதாக தெரிவித்தவர்கள், எதிர்கால அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து முன்னெடுப்பதாகவும் இதன் போது தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தங்களது கட்சிகளோடு இணையவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
