கட்சியின் தேவைக்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை உருவாக்கவன்றி பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவே நாட்டில் அரசியல் கட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நேற்று (06) முற்பகல் இடம்பெற்ற சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு சென்று நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிட்டதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மீண்டும் அவ்வாறானதொரு நிலை ஏற்படாதிருக்க பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அண்மைய நிகழ்வுகள் காரணமாக நாட்டின் ஜனநாயகம் ஆட்டம் கண்டுள்ளது என்பதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நாட்டை முன்னெடுத்துச் செல்லுமாறு சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கியதுடன் சட்டத்தரணிகள் தமது தொழில்சார் கோரிக்கைகள் சிலவற்றையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கைகள் பலவற்றிற்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், அனுராதபுர சட்டத்தரணிகளின் தொழில் அந்தஸ்தை உயர்த்தும் வகையில் சட்டத்தரணி ஓய்வறை நிர்மாணிப்பதற்கு பணம் ஒதுக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.