நீதித்துறையை அவமதிக்கும் ஜனாதிபதி, பிரதமருக்கு சஜித் பகிரங்க சவால்

மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதி தனது ரோயல் கல்லூரி சகாவான பிரதமர் தினேஷ் குணவர்தன ஊடாக, பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குள் மறைந்து கொண்டு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று (27.07) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் அரண் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற தீர்மானம் அடிப்படையற்றதா? இந்த கதையை பாராளுமன்றத்திற்குள் கூறாமால் முதுகெழும்பு இருக்குமாயின் வெளியே வந்து மேடையில் கூறுமாறு அமைச்சரவைக்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், மக்களால் தெரிவு செய்யப்படாத பதில் ஜனாதிபதிக்கும் சவால் விடுகின்றேன்.

அவ்வாறு நடந்தால் நீதிமன்றத்தை அவமதித்த தொடர்பில் அவர்கள் பதில் கூற வேண்டிவரும்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எடுத்த தீர்மானங்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டி நேர்ந்தது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச பதவிகளில் எவரும் கடைசி வரை ஜனாதிபதியாக இருக்க முடியாது. எவரும் கடைசி வரை பிரதமராகவும் இருக்க முடியாது. எவரும் கடைசி வரை எப்போதுமே ஆளும் கட்சியில் இருக்கப்போவதுமில்லை. மக்களின் தீர்மானம் இந்த முறை சரியானதாக, போலியற்ற ஜனநாயகத் தன்மையுடன் மீண்டும் பொது மக்கள் யுகத்தை ஆரம்பிக்கும் போது, அரசியலமைப்பு, மீயுயர் சட்டத்தை, நீதிமன்ற தீர்மானங்களை மீறுவோருக்கு தராதரம் பாராது அனைவருமே பதில் சொல்ல வேண்டி வரும்.

நாட்டின் அரசியலமைப்பு அப்பட்டமாக மீறப்படும்போதும், நீதிமன்ற தீர்மானங்களுக்கு சவால் விடுக்கப்படும் போதும், நாட்டைக் காப்பாற்றுவோம் என்று கூறும் வாய்ச் சொல் தலைவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அமைச்சரவையையும், பிரதமரும், ஜனாதிபதியும் நீதிமன்றங்களை அவமதிக்கும் போது வாய்ச் சொல் வீராப்புத் தலைவர் மௌனம் சாதிக்கிறார். அவருக்கும் அரசாங்கத்துடன் டீலில் இருப்பதாக தெரிகிறது. வாய்ச் சொல் தலைவர்களுக்கு ஜனாதிபதியுடனும், அரசாங்கத்துடனும் டீல் இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களுடன் மட்டுமே டீல் உள்ளது.

உலகின் இரத்தினம் மற்றும் ஆபரணத் தொழில் 200 பில்லியன் டொலர் கொண்ட தொழிலாக மாறி காணப்படுகிறது.

எமது நாட்டில் காணப்பட்டு வரும் ஒழுங்கற்ற இரத்தினம் மற்றும் ஆபரண கொள்கையால் இரத்தினத் தொழில் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. எனவே, இரத்தினத் தொழிலில் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.

இரத்தினக்கல் தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் வலுவூட்டும் வகையில் புதிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கொள்கையை உருவாக்கித் தருவேன்.

இரத்தின கற்கள் மற்றும் இதர நகைகளுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் வெட் வரியை நீக்க வேண்டும். கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரத்தின கற்கல் அடங்களான பொதிகளை கையில் கொண்டு வரும் போது அதனை விடுவிப்பதற்கு வசதியாக 200 டொலர்களை சுங்கத் திணைக்களத்துக்குச் செலுத்தி, தீர்த்துக் கொள்ளும் முறையானது இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்டு, இந்நாட்டின் ஏற்றுமதியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு பக்க பலத்தை கொடுக்க வேண்டும்.

இரத்தினத் தொழில் இறக்குமதி மீதான VAT காரணமாக ஹொங்கோங்கில் இரத்தினத் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது. அதனை மீண்டும் எமது நாட்டிற்கு பெற்றெடுத்து, இரத்தினக்கல் தொழிற்துறையின் மறுமலர்ச்சியை ஆரம்பிப்போம்.

சுரங்கத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் நவீன இயந்திரங்கள் வழங்கி, ஏற்றுமதி ஊக்குவிப்பேம். அவ்வாறே பிற நடவடிக்கைகளுக்கும் ஏதுவான எளிய வருமான வரி முறையை ஏற்படுத்தித் தர எதிர்பார்க்கின்றேன். நிகர இலாபத்தின் மீதான வரிவிதிப்பை மாற்றியமைத்துத் தருவேன். சுரங்கத் தொழிலாளர்களுக்கு காப்பீடு வழங்குவது உள்ளிட்ட உரிமையாளர்களுக்கு பக்க பலத்தை வழங்க நடவடிக்கை எடுப்பேன். இரத்தினபுரியை மையமாகக் கொண்ட இரத்தினக்கல் தொழில்துறையினூடாக இந்தத் துறையை உயர் மட்டத்திற்கு இட்டுச் செல்ல நடவடிக்கை எடுப்பேன்.

தேயிலைத் தொழிலை வலுப்படுத்தி, தற்போது லயன் அறைக்குள் சுருங்கிப்போயுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு எப்பொழுதும் சம்பளம் அதிகரிக்கப்படும் எனக் பொய்களை கூறாமல், கன்பனிக் காரர்களுடன் திருட்டு ஒப்பந்தங்களைச் செய்து தொழிலாளிகளை நசுக்குவதை விட்டுவிட்டு, தோட்டத் தொழிலாளர் சமூகத்தை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவேன்.

தரிசு நிலங்கள், விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் காணிகளை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கி, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply