இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. 61.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 263 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆரம்பிக்கும் போது பலமாக இலங்கை அணி காணப்பட்ட போதும், மேலதிக ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுள்ளது .
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களையும், கமிந்து மென்டிஸ் 64 ஓட்டங்களையும் பெற்றனர். 127 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். ஆரம்பத்தில் பத்தும் நிஸ்ஸங்க 51 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்த இன்னிங்ஸ் அவருக்கு டெஸ்ட் மீள்வருகை ஒன்றை வழங்கியுள்ளது. இந்த மூவரையும் தவிர குஷல் மென்டிஸ் 14 ஓட்டங்களையும், அசித்த பெர்னாண்டோ 11 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனையோர் இரட்டை படை இலக்கத்தை கூட தொடவில்லை.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹல், ஒலி ஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். க்றிஸ் வோக்ஸ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். சொஹைப் பஷீர் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்தது 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஒல்லி பொப் 154 ஓட்டங்களை 156 பந்துகளில் பெற்றுக்கொண்டார். அதன் மூலமே இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. பென் டக்கெட் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இந்தப் போட்டி ஆரம்பித்த நாள் முதல் மழை அவ்வப்போது குறுக்கிட்டு வருகிறது.
ஓவல் மைதானத்திலிருந்து விமல்