அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படைத் தூண்களைக் கொண்ட திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கல்வி அமைச்சின் வரவு செலவுத் தலைப்பு தொடர்பான விவாத்த்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
2025ஆம் ஆண்டுக்காக எமது அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதுவரை கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட அதிகப்படுத்தியுள்ளோம். அடுத்த 8 மாதங்களுக்கு மட்டும் 619 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மூலதனச் செலவினங்களுக்காக மட்டும் 21 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதுவே அண்மைக்கால வரலாற்றில் கல்வி மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகையாகும்.
இதை செலவிடுவதற்கான தெளிவான திட்டத்தை முன்வைத்துள்ளோம். இந்த கல்வித் துறையை சரியான முறையில் செய்யாமல், நாம் எதிர்பார்க்கும் சமூக மாற்றத்தை அடைய முடியாது. கல்வியில் ஏற்படுத்தப்படும் மாற்றம் மூலம் தான் நாம் எதிர்பார்க்கும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தை அடைய முடியும். எனவே, இத்தொகையை செலவிடும் திட்டம் குறித்து பேசும் போது, கல்வித்துறையை மாற்றுவது குறித்து ஆழமாக சிந்தித்து, அதற்கு தேவையான நடவடிக்கைகளை கண்டறிந்து, இந்த வரவுசெலவுத்திட்டத்தை சமரப்பித்துள்ளோம்.
கல்வி அமைச்சு என்ற வகையில், நாங்கள் முன்வைக்கும் கல்வி சீர்திருத்தத்திற்கு ஐந்து அடிப்படை அம்சங்களுடன் தலையிடுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். முதலாவது பாடத்திட்டத்தை இற்றைப்படுத்தல். இதன் நோக்கம் பாடத்திட்டத்தை இற்றைப்படுத்துவது மட்டுமல்ல. அது சமூகத்தை மாற்றுவதற்குத் தேவையான மனித வளத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் புதிய பாடத்திட்டத்தை முன்வைக்க நாங்கள் முன்மொழிகிறோம். அதற்காக அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களை முன்னெடுப்பதற்கு 160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி சீர்திருத்தம் பற்றி முன்பும் பேசப்பட்டுள்ளது, கல்வி சீர்திருத்தம் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக இது முறையாக செயல்படுத்தப்படவில்லை. இந்த சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், பாடத்திட்டத்தை மட்டும் மாற்றினால் போதாது. இன்னும் பல பகுதிகள் உள்ளன. அதனால்தான் கல்விச் சீர்திருத்தத்தில் ஐந்து அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதில் ஒன்று பாடத்திட்டம், அதனால் தான் வரவுசெலவுத்திட்டத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தேவையான மனித வளத்தைத் தயார்படுத்துதல். ஆசிரியர்கள் மட்டுமன்றி, ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வியாளர்கள், கல்வி நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இவர்கள் அனைவரினதும் திறன் விருத்தியில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அது தான் எங்கள் இரண்டாவது அடிப்படை. அந்த நோக்கத்திற்காக, வரலாற்றில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் திறன் விருத்திக்காக மிகப் பெரிய தொகையை ஒதுக்கியுள்ளோம். இதற்காக 1640 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்படவில்லை. எங்களுக்கு இதைச் செய்ய முடிந்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆசிரியர்களை உருவாக்க, ஆசிரிய கலாசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், குறிப்பாக தற்போது ஆசிரிய சேவையில் உள்ள மனித வளங்கள் அல்லது தொடர்புடைய சேவைகளில் கவனம் செலுத்தியுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உண்மையில் எமது தேசிய கல்வியியல் கல்லூரிகள் மிகவும் சோகமான நிலையில் உள்ளன. பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விக் கல்லூரிகளுக்கு ஒரு கண்காணிப்பு வி ஜயத்தை மேற்கொண்டேன். எப்போதேனும் ஆசிரியராகப் போகும் அந்த மாணவர்களுக்கு வசதிகள் இல்லை. தங்குமிட வசதிகள் இல்லை, தண்ணீர் இல்லை, நாம் பாடசாலைகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் பற்றி பேசுகிறோம். ஆனால், அந்தப் பாடசாலைகளில் பாடம் நடத்தப் போகும் ஆசிரியர்கள் கரும்பலகையில் இருந்துதான் பாடம் படிக்க வேண்டும். சரியாக மின்சாரம் இல்லை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை, அதனால் தான் இந்த ஆண்டு விசேட கவனம் செலுத்துகிறோம். மேலும் பல ஆண்டுகளாக பாடசாலைகளில் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். 2016 ஆம் ஆண்டு முதல் நல்லாட்சியின் மூலம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டம் உள்ளது. ஆனால் இன்றும் கூட முறையாக கட்டி முடிக்கப்படாத ஆபத்தான கட்டிடங்கள் உள்ளன. நல்ல பெயர்ப் பலகைகள், கதவுகள் மற்றும் சுவர்கள் உள்ளன, ஆனால் அவற்றில் இருந்து உள்ளே நுழைந்த பின்னர், பிள்ளைகளுக்கான நல்ல வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் இல்லை. தண்ணீர் இல்லை இன்றும் குறைந்தபட்ச சுகாதார வசதிகள் கூட இல்லாத பாடசாலைகள் உள்ளன. எனவே இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி 11,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்து பாடசாலைகளில் அரைகுறையாக நிற்கும் வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய எண்ணியுள்ளோம். குறிப்பாக சுகாதார வசதிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் எமது நாட்டு பிள்ளைகள் சுகாதார வசதிகள் இல்லாத பாடசாலைக்கு செல்வதை தடுக்க முடிவு செய்துள்ளோம். பெருந்தோட்ட சமூகத்திலுள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். எனவேதான் இந்த நிரல் அமைச்சின் ஊடாக 11,126 மில்லியனும் மாகாண சபைகள் ஊடாக 14,896 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும், அதுவே நமது மூன்றாவது அடிப்படை.
நான்காவது தூண் அல்லது அடிப்படை என்னவென்றால், பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படவும் வேண்டும் மற்றும் கற்றல் செயல்முறை மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும். பரீட்சை திணைக்களத்திற்கு மதிப்பீடுகளுக்கான விசேட பொறுப்பு உள்ளது, பரீட்சை திணைக்களம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத பல தேவைகளைக் கொண்டுள்ளது நான் பாராளுமன்றத்திற்கு வந்த முதல் வருடம் பரீட்சை திணைக்களத்திற்கு செலவிடப்பட்ட மூலதனம் பற்றி கேட்டது ஞாபகம் இருக்கிறது. மிகக் குறைவு. இந்த வருடம் பரீட்சை திணைக்களத்திற்கு 12,360 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளோம். மதிப்பீட்டு செயல்முறையை வலுப்படுத்தவும், கொள்ளளவை அதிகரிக்கவும் பரீட்சை திணைக்களத்திற்கு இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
நமது கல்வி முறையின் மிகப்பெரிய பிரச்சினை, பரீட்சை மைய முறையில் பிள்ளை பெறும் உளவியல் அழுத்தமாகும். அதை மாற்ற வேண்டுமானால், அந்த மதிப்பீட்டின் முக்கியப் பொறுப்பைக் கொண்ட நிறுவனத்தை வலுப்படுத்த வேண்டும்.
எமது ஐந்தாவது தூண் கல்வி என்பது, நாம் பார்ப்பது போல், அது அமைச்சு, பிள்ளைகள், ஆசிரியர்கள் அல்லது பாடசாலைகளுக்கு மட்டும் பொறுப்பாக உள்ள ஒன்று அல்ல. இதைச் செய்ய, ஒரு சமூக உரையாடல் தேவை. இது போன்ற சமயங்களில்தான் எனக்கு கலாநிதி ஜானகி ஜயவர்த்தன நினைவுக்கு வருகிறார். இந்த சமூக உரையாடலை உருவாக்க சமூக ஆர்வலர்கள் தேவை. அந்த சமூக உரையாடலை உருவாக்குவது எங்கள் திட்டத்தில் உள்ளது. மேலும் பிள்ளைகளின் நலன்பேணலுக்காகவும் நிதி ஒதுக்கியுள்ளோம்.
உயர்கல்வியைப் பற்றியும் நான் குறிப்பாகச் சொல்ல விரும்புகிறேன். உயர்கல்வியிலும் தரத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளோம்” என்றார்.