ஐக்கிய நாடுகள் சபையின் திட்ட சேவைகள் பிரிவின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சார்லஸ் கெலனன் மற்றும்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் இன்று செவ்வாய்யக்கிழமை (11.03) இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது ஐ.நாவின் திட்ட சேவைகள் பிரிவில் தெற்காசியாவுக்கு பொறுப்பாகவுள்ள முக்கிய பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு பொறிமுறைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
கடற்றொழிலாளர்களுக்குரிய திட்டங்கள் மற்றும் அதற்கான ஐநாவின் பங்களிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோன்று அபிவிருத்தி துறைகளில் ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவிற்கும் இலங்கைக்கும் இடையிலான
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
நாட்டில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் திட்ட சேவைகள் பிரிவு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நன்றி தெரிவித்தார்.