மின் கட்டணம் விண்ணை நோக்கி, அரசாங்கம் அடக்கு முறையில்!

மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது என இன்று (23.08) மின்சார பாவனையாளர் சங்கத்தின் விசேட சந்திப்பில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களின் வாழ்வுரிமையைப் போன்று பாவனையாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் முன் நிற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடைபெற்றதாகவும், வீதியில் போராட்டம் நடத்துவது கூட பயங்கரவாதச் செயலாக கருதப்படுகின்ற காலகட்டமாக இருக்கின்றது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தாம் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்காக முன் நிற்பது, கூட்டங்கள், அமைதியான போராட்டம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் ஆகியவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நாட்டு மக்களை மிகப்பெரிய ஆபத்தில் தள்ளும் பல கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச சமூகம் மற்றும் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் சர்வதேச நிவாரணங்கள் கூட கிடைக்காமல் போகலாம் எனவும், இதனால் நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் எனவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் அப்பட்டமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறி அடிப்படை உரிமைகளையும் மீறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply