தமிழ் திரையுலகின் நடிகரும், வசனகர்த்தாவும், இயக்குநருமான ஈ. ராம்தாஸ் நேற்று (23.01) காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ராம்தாஸ். மறைந்த நடிகரும், இயக்குநருமான மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றிய பின் இதுவரை ஆறு திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.
‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மைக்காலமாக வயது மூப்பின் காரணமாக திரைப்படத்தை இயக்கும் பணியிலிருந்து ஒதுங்கி, நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர் நேற்று காலமானார்.
சக நடிகர்களையும், சக கலைஞர்களையும் எப்போது சந்தித்தாலும் ஊக்கமளிக்கும் வகையில் பேசும் ராம்தாஸின் இழப்பு, தமிழ் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவருக்கு திரையுலகினரும், ஏராளமான ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதள ஊடகங்கள் மூலமாகவும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

