நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தில் 3.5% பொருளாதார சரிவு எதிர்பார்க்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகர முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“குறைவான வருமாதத்துடன் இதுபோன்ற கடுமையான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வருவாய் வரி என்பது 2018 இல் இருந்த ஒரு வரியாகும். தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளோம், அதில் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகம் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஏற்கனவே உள்ள வரி தான். முன்னரே 15 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. இப்போது இரண்டு முறை மீண்டும் 15% ஆக உயர்த்தியுள்ளோம். நாட்டின் வரி வருமானம் 1,800 பில்லியன். இதில் 950 பில்லியன் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பராமரிக்க அதில் பாதியை செலவழிக்க நேரிடுகிறது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் 619 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 129 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை 151 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறுசீரமைப்பு அவசியமா இல்லையா என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. கடன் வாங்குவது சாத்தியமில்லை என்றால், பணம் அச்சிடுவதைக் கொள்கையாகப் பயன்படுத்தாவிட்டால் என்ன மாற்றுவழி? இதற்கான தீர்வு என்ன என்ற கேள்வியில், சர்வதேச நாணய நிதியம்தான் எங்களுக்கு கிடைத்த ஒரே பதில். அந்த நிவாரணத்தை அந்த நாடுகள் எமக்கு வழங்கினால், நாமும் பொறுப்போடும் அர்பணிப்போடும் செயற்ட்பட வேண்டும். இதற்கான எந்தத் தயார்நிலையும் இல்லாமல் நமது சுமையை அவர்கள் சுமக்கத் தயாராக இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவின்றி நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.