பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் மயில்சாமி, நகைச்சுவையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இதுவரையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை கட்டி வைத்திருந்தவர்.
இவரது மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைத்துறையில் அவருடன் பணியாற்றிய பலர் அவரை பற்றிய கருத்துக்களை பதிவிட்டுள்ளதுடன், தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
‘எதை கொண்டு வந்தோம், எதை கொண்டு செல்வோம்’ என்று அடிக்கடி அவர் சொல்வதுடன், தன்னால் இயன்ற உதவிகளை அனைவருக்கும் செய்து வந்தவர் எனவும் இவ்வாறான துரதிர்ஷவசமான சம்பவம் நிகழும் என்பதை எதிர்பார்க்கவில்லை என சக கலைஞ்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
மறைந்தாலும் மறக்கப்படமாட்டார் மயில்சாமி என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
