மல்வத்து ஓயா திட்டத்தால் விவசாயிகள் பாதிப்பு!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.07) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா, வெண்கல செட்டிகுளம் பகுதியை உள்ளடக்கியதாக முன்னெடுக்கப்படும் மல்வத்து ஓயா திட்டம் காரணமாக 55 ஏக்கர் விவசாய காணிகளுக்குரிய 33 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு வருடமாக பயிற் செய்கையில் ஈடுபடாமையால் நஸ்ட ஈடு கோரியுள்ளதாகவும் வெண்கல செட்டிகுள பிரதேச செயலாளர் சுலோஜனாவால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்படி கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், வவுனியா, செட்டிகுளத்தை உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் மல்வத்து ஓயாத்திட்டம் தற்போது  நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன்  நான் கதைத்த போது தெரிவித்திருந்தனர்.

குறித்த திட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தால் 23000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் நாட்டின் பொருளாதார நிலை காரணமாக தற்போது அந்த நிதியை பெற முடியாத நிலை உள்ளது. அதனால் எதிர்காலத்தில் சீனாவின் உதவி மூலம் அதனை செய்ய முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் நிதி கடந்த அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 200 மில்லின் செலவிற்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்து மழை காலத்திற்கு முன்பாக 2 மாதங்களுக்குள் மிகுதி 300 மில்லின் நிதிக்குரிய வேலைத்திட்டத்தை, அப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பை  வழங்க பயன்படுத்த வேண்டும்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவதற்கு உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம் மக்களது காணி கையகப்படுத்தப்பட்டால் மாற்று காணிகளும் வழங்கப்பட வேண்டும். அதற்கு பிரதேச செயலாளர், அரச அதிபர் ஆகியோர் சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத் திட்டத்திற்கான நிதி எதிர் காலத்தில் சீனாவால் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Social Share

Leave a Reply