கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் தொடர்பான ஒப்பந்தம், சட்டமா அதிபரின் அனுமதியை பெற்றதன் பின்பே, அமெரிக்காவை சேர்ந்த நியூ போர்ட்ரெஸ் எனெர்ஜி (New Fortress Energy – NFE) நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ தெரிவித்தார்.
குறித்த ஒப்பந்தம், அமைச்சரவையின் அனுமத்தியினை பெற்றதன் பின்னரே கைச்சாத்திடப்பட்டது. விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பாராளுமன்றத்தில் குறித்த ஒப்பந்தம் பற்றிய விடயங்களை வெளியிட முடியும். ஆனால் இரு தரப்பினரின் அனுமதியின்றி ஒப்பந்தத்தை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனை ஒப்பந்தத்தில் உள்ளமையினால் ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை பொதுவெளியில் வெளியிட முடியாது என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“இந்த ஒப்பந்தம் இதுவரை இலங்கை மின்சார சபையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் வெளியிடப்பட்டால், அரசுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா என்பது குறித்து திறைசேரி, சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்டுள்ளது,” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது ஒரு வர்த்தக ஒப்பந்தம் என்றும், அங்கீகாரம் இல்லாதவர்கள் இதுபோன்ற ஒப்பந்தங்களைப் பெற்றால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
