இலங்கை கிரிக்கெட் தொடர்பான வாக்கெடுப்பில் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையை மீறியதாக குற்றசாட்டு

கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு குறிப்பிட்ட கும்பல்,ஊழல்வாதிகள், கொள்ளைக்காரர்கள், குண்டர்கள், போதைப்பொருள் கும்பல்கள்,ஒழுக்கேடான நபர்களுக்கு சொந்தமானது ஒன்றல்ல என்றும்,அது 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமானது என்றும்,இன்றைய தினம் கிரிக்கெட்டில் இருந்து ஊழல் கும்பலை விரட்டியடிக்கும் செயல் உறுதியானது என்றும்,இதன் போது பெரும் குறைபாடு நேர்ந்ததாகவும், இதில் சபாநாயகர் அவர்கள், தனது பெயரில் பிரேரணைக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்கும் உரிமையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை என்றும், சபாநாயகர் மீது சில மறைமுக சக்திகள் அழுத்தங்களை பிரயோகித்ததே இதற்குக் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தவறான செயல் என்றும்,சபாநாயகரே உறுப்பினர்களின் உரிமைகளை மீறியுள்ளார் என்றும்,இதற்காக வருந்துவதாகவும், பெயர்கள் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடந்திருந்தால்,சர்வதேச கிரிக்கெட் சபைக்கு பெயர்களை அனுப்பியிருக்கலாம் என்றும், சபாநாயகரின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற முறைமையினுள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(09.11) மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிரிக்கெட் சபை இப்போதேனும் வெளியேற வேண்டும் என்றும்,நாட்டில் செயற்படும் சர்வாதிகார அரசியல் கலாசாரத்தின் மற்றுமொரு எடுத்துக்காட்டாக சபாநாயகரின் நடத்தை மற்றும் செயற்பாடுகளை கூற முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி வாக்களிப்பில் இருந்து விலகியமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவிக்கையில்;

இந்த பிரேரணையை முன்வைக்கும் போது, ​​பாராளுமன்றத்தின் முன்னணி இருக்கை உறுப்பினர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் கூட வந்தன என்றும், அவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும்,
இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முன்வரிசை உறுப்பினர்கள் கூட இந்த பிரேரணைக்கு உடன்பட்டனர் என்றும், தான் 225 பேருக்காக பேசினாலும் குறிப்பிட்ட எம்.பி.க்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறித்து மக்களே முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு சொந்தமான கோடிக்கணக்கான நிதியை சரியான முறையில் பயன்படுத்தி திறமைசாலியான வீரர்களுக்கு கீழ் மட்டத்திலிருந்து முன்னேற வழிவகை செய்ய வேண்டும் என்றும்,கிரிக்கெட் குறித்த அறிவு உள்ளவர்களுக்கு இதன் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply