மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 தமிழக மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் மூன்றாவது சம்பவம் எனவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், இந்த கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வில் பெரும் அச்சத்தையுஏற்படுத்துவதாகவும், இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கை கடற்படையினர் பறிமதல் செய்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Social Share

Leave a Reply