காலியில் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழு..!

காலியில்; அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

காலி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலி நகரம் மற்றும் காலி கோட்டை பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அபிவிருத்தி நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

காலி கோட்டையில் அமைந்துள்ள அரச நிறுவனங்களையும் காரியாலயங்களையும் காலி கோட்டைக்கு வெளியே கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெற்று வருவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

இதன்போது அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

காலி கோட்டைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

இதேவேளை, காலி கோட்டையை அண்மித்த பகுதியில் நேற்று (27) நடைபெற்ற 2024 காலி இலக்கிய விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், வெளியீட்டாளர்கள் ஒன்றிணையும் சர்வதேச இலக்கிய விழாவான காலி இலக்கிய விழா பல வருடங்களுக்குப் பின்னர் இவ்வருடம் மீண்டும் நடைபெறுவது விசேட அம்சமாகும்.

ஜனவரி 25ஆம் திகதி ஆரம்பமான காலி இலக்கிய விழா இன்றுடன் (28) நிறைவடைகிறது.

Social Share

Leave a Reply