2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (06) ஆரம்பமாகிறது.
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 65 ஆயிரத்து 331 தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எனவே பரீட்சாத்திகள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை அனுமதிப் பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு சமூகளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பரீட்சைக்கான பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.