எரிபொருளுக்கான வரி நீக்கபடுமா?

எரிபொருளுக்கான வரி நீக்கபடுமா?

எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என தற்போதைய அரசாங்கம் தேர்தல் பேரணிகளில் கூறியதை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லீற்றர் டீசலின் விலை 100 ரூபாவாக குறையும் என கூறிய அவர் ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை தாமதமின்றி இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அனுப்புமாறும் அரசாங்கத்திடம் அமைச்சர் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply