அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் விற்பனை?

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் விற்பனை?

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சுற்றுநிருபம் திணைக்களத் தலைவர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகளின் தலைவர்கள், அரச வங்கிகள் மற்றும் அரசுடைமை நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 02ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது எட்டப்பட்ட தீர்மானத்துக்கமைய, தங்களின் அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை விற்பனை செய்ய முடியும் எனவும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

நிறுவனத்தின் வாகனத் தேவையை மதிப்பிட்டு, பயன்படுத்துவதற்கு சிக்கனமற்ற, நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு தேவையற்ற வாகனங்களை அரசாங்கத்தின் பெறுகை நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் விற்பனை நடவடிக்கை தொடர்பான தகவல்கள் நிதியில்லாத ஆதன முகாமைத்துவ முறையில் எதிர்வரும் மார்ச் 01ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இயைபு முறைக்குறியீட்டுத் தலைப்பு (H S Heading) 87.03 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட இயந்திரக் கொள்ளளவு 1800 CC இனை விஞ்சிய பெற்றோல் வாகனங்கள், இயந்திர கொள்ளளவு 2300 CC இனை விஞ்சிய டீசல் வாகனங்கள் சகலவற்றையும் விற்பனை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டபள் கெப்ஸ், சிங்கள் கெப்ஸ், வேன்கள், பஸ்கள், லொறிகள் மற்றும் டிரக்குகள் என்பவை இதில் உள்ளடங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாகனங்களின் தொடர்புடைய விவரங்களின் பிரதிகளை ஒவ்வொரு நிறுவனமும் எதிர்வரும் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன விற்பனை மூலம் கிடைத்த வருமானமும் பதிவு செய்யப்படுதல் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply