வாகனங்களை சட்டவிரோதமாக மாற்றியமைத்த நபர் ஒருவர் மாத்தளையில் நேற்று(01.01) கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக இவ்வாறு வாகனங்களை மாற்றியமைத்து விற்பனை செய்யும் ஒரு வலையமைப்பை பொலிஸ் மோசடி பிரிவு இனம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது 5 கோடி ரூபா பெறுமதியான 8 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு வாகனங்கள் ஓடும் நிலையில் காணப்பட்டதாகவும், இரண்டு வாகனங்கள் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த வாகனங்களது இலக்கத்தகடுகள், இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் என்பன மாற்றப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரிவியவந்துள்ளது.
இந்த வலையமைப்பில் பலர் காணப்படுவதாகவும், நிதி நிறுவனம் ஒன்றை சேர்ந்தவர் ஒருவர் காணப்படுவதாகவும், இந்த வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு கடன் ஏற்பாடுகளை அவர் செய்து வழங்கியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவரை 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.