“உங்கள் நகரிலும் ஒரு மருந்தகம்” என்ற விசேட வேலைத்திட்டத்துக்கமைய, அரச ஒசுசல மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் துரிதமாக புதிய அரச மருந்தகங்களை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் தமது பணத்தில் மருந்துகளை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம்,
சலுகை விலையில் மருந்துக்கொள்வனவை மேற்கொள்ள உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒசுசலவினுடைய பிரிவினை சுகாதார அமைச்சு உடன் ஆரம்பிக்க வேண்டும் என கடந்த 05.02.2025 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன் பிற்பாடாக தற்போது சுகாதார அமைச்சினால் துரித திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிற மாகாணங்களிலும், மருந்தகங்கள் இல்லாத மாவட்டங்களிலும் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான அவசரத் திட்டம் உரிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மக்கள் நலனை கருத்திற்கொண்டு உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அரசாங்கத்திற்கு தனது நன்றிகளையும் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.