இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் T20 உலகக்கிண்ண சுப்பர் 8 சுற்றின் 2 ஆவது போட்டியாக கண்டி பல்லேகலயில் இன்று(22.02) நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சற்று தடுமாறினாலும் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் பில் சோல்ட் 62(40) ஓட்டங்களையும், வில் ஜக்ஸ் 21(14) ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் டுனித் வெல்லாலகே 3 விக்கெட்களையும், மஹீஸ் தீக்ஷண டில்ஷான் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
147 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 16.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 95 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இதில் தசுன் ஷானக 30(24) ஓட்டங்களை பெற்றார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் வில் ஜக்ஸ் 3 விக்கெட்களையும், லியாம் டவ்சன், அடில் ரஷீட், ஜொப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இந்த தோல்வி சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணியின் முன்னேற்ற வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. மறுபுறம், இங்கிலாந்து அணி இந்த வெற்றியால் அரையிறுதிக்கான தனது வாய்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.