கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்கள் பூர்த்தி!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நேற்று (24.03) அமைச்சகத்தில் நடைபெற்றது.

திறந்த மட்டத்தின் (Open Stream) கீழ் இரு அதிகாரிகளும், வரையறுக்கப்பட்ட மட்டத்தின் (Limited Stream) கீழ் எட்டு அதிகாரிகளும் இவ்வாறு நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு அனுமதி வழங்கும் குழுவின் விசேட அனுமதியின் பேரில், பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் ஆற்றிய விசேட உரை வருமாறு:
“சுமார் பத்து ஆண்டுகளாக நிலவிய நிர்வாக ரீதியான தடைகளை நீக்கி, இன்று நீங்கள் சட்டபூர்வமான அதிகாரங்களுடன் உங்களது கடமைகளை ஆரம்பிக்கிறீர்கள். அரசாங்கத்தின் கொள்கைகளை மிக வினைத்திறனாக அமுல்படுத்துவதையே நாம் அரச அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். எனவே, அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அரச கொள்கைகளைச் சரியாக நடைமுறைப்படுத்தி உங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்பார்க்கிறேன்.”

மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
“மோசடி மற்றும் ஊழல் என்பது ஒரு தேசத்தை அழிக்கும் கொடிய புற்றுநோய் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலதிக சலுகைகள் மற்றும் சம்பளங்களைக் கூட நிராகரித்து தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தை அரச நிர்வாகக் கட்டமைப்பிற்குள் நிலைநாட்டி வருவதாகவும், அந்தத் தூய்மையான சேவையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புதிய அதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். குறிப்பாக ‘Ditwa’ போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்திய அவர், அமைச்சிற்குள் எந்தவொரு மோசடிக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்காமல் தூய்மையான அரச சேவையை வழங்குவதற்கு உறுதிபூணுமாறும் அறிவுறுத்தினார்.”

இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply