இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷெங்கோன் (Qi Zhenhon) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (11.05) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இந்தப்பேரழிவு தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் பிரகாரம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் என ஐக்கிய மக்கள் சக்தி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை ஆட்சி செய்தல்,இலஞ்சம்,ஊழல் மற்றும் அடக்குமுறைகள் ஒழிப்பு என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையான அம்சமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையை தற்போதைய நிலையில் இருந்து மீட்கும் முகமாக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையிடுமாறும் தூதுவரிடம் சஜித் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டில் அரசியல் சிக்கல்கள் காணப்படும் நிலையிலும், மாற்றங்கள் ஏற்படுமென்ற நிலையிலும் இந்த சந்திப்பு முக்கியமானதாக அமைந்திருக்கலாமென அரசியல் வட்டாரங்களுக்குள் பேச்சுக்கள் காணப்படுகின்றன. முக்கிய தகவல்கள் பகிரப்பட்டிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
