தமிழருக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை ஆட்டம்தான் இன்று உங்கள் மீதே தொடர்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பாராளுமன்றத்தில் இன்று சிங்கள மொழியில் ஆவேசமாக உரையாற்றியுள்ளார்.
“இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். Indiscriminate shelling and aerial bombing”
“இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது.
“இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்கு புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டை கொளுத்தினார்கள். எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தை கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான சினிமா கலைஞரான என் தந்தை அதன் பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார்” என கூறிய மனோ MP,
“இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தான். இன்றுள்ள டிஎன்ஏ எம்பிக்கள் புதியவர்கள். அவர்களுக்கு அவரை தெரியாது. ஆனால் எனக்கு நன்கு தெரியும். கொழும்பில் வாழ்ந்த நாம் இருவரும் 2001ம் ஆண்டில் இருந்தே நல்ல நண்பர்கள். சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சினையை சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார்.”
“அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராக போராடினோம். என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. எனவும் ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த விடயங்களோடு “இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம் என மேலும் மனோ கணேசன் தனது உரையில் கோரிக்கையினை முன் வைத்தார். இந்த விடயம் தொடர்பில் மேலும் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
“எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.”
“முதல் அரசியல் கொலையை, 1959ல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.”
“நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாயல்களுக்கும், பாதிரிகளை தேவாலயங்களுக்கும் போக சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்”
“இந்த சபையில் ஒரு ஆமதுரு மந்திரி இன்று இருக்கிறார். அவரே இங்கு வந்த கடைசி மந்திரியாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.”
“இந்நாட்டின் இன்றைய சீரழிவுக்கு இவர்கள்தான் காரணம். எவருக்கும் இவர்களது அறிவுரை வேண்டுமென்றால், அவர்களது மத ஸ்தலங்களுக்கு போய் கேட்கலாம். இங்கே வேண்டாம்”.
“கடந்த தேர்தலின் போது ஒரு கேலிகூத்து நடந்தது. களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாக பிளந்ததாம். ‘டோம்’ என சத்தம் வந்ததாம். பாதாளத்தில் இருந்து நாகராஜன் வந்தாராம். ‘நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்’ என ஒரு அசரீதி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!
சும்மா இந்த வன்முறைகளை பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்பங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்கு போக வேண்டும். நாடு உருப்படும்.

,