மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் இன்று புதன்கிழமை (15.06) காலை பெட்ரோல் கையிருப்பில் காணப்பட்ட போதும் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
இவ்வாறான சூழலில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயிலுக்கு அருகில் உள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் இருப்பதாக மக்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு பெட்ரோல் வழங்கப்படாத சூழ்நிலையில், எதற்காக பெற்றோலை வைத்துக் கொண்டு வழங்குகின்றீர்கள் இல்லை? என மக்கள் கேட்ட போது பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்றோலை விநியோகிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக அங்கு கடமையாற்றிய ஊழியர் ஒருவர் தெரிவித்ததாக மக்கள் கூறினர்.
இந்த விடயம் தொடர்பாக எமது செய்தி வேவை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன வட மாகாணத்துக்கான மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு இந்த விடயம் தொடர்பாக கேட்ட போது “அந்த நிலையத்தில் சாதரண பெட்ரோல் வாகனங்களுக்கு அடிக்க முடியாதளவு சிறு தொகை இருக்கின்றது. அதனை இயந்திரம் மூலம் எடுக்க முடியாது. மட்டுப்படுத்தப்பட்ட அளவு 95 ரக பெட்ரோல் அத்தியாவசிய வாகனங்களுக்காக வழங்குவதற்காக கையிருப்பிலுள்ளது. அதனை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்க வேண்டாமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது” என தெரிவித்தார்.
நீண்ட நாட்களாக மன்னார் மாவட்டத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெட்ரோல் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறான சில சூழ்நிலைகளில் பிழையான தகவல்கள் பரிமாற்றங்கள் காரணமாக குழப்ப நிலைகள் ஏற்படலாம். உரிய தரப்புகள் தகவல்களை சரியாக தெரிவித்தால், மக்கள் குழப்பமின்றி உரிய தகவல்களை பகிர்ந்தால் தேவையற்ற குழப்பங்களை தீர்க்கலாம்.
