மன்னார், இரட்டைக் கொலை – சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் 5 பேர் இன்றைய தினம் (18.06) காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்த 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டதனை தொடர்ந்து அவர்கள் விளக்கமறியலுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி காலை மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் வைத்து கத்திக்குத்துக்கு இலக்கானார்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய யேசுதாசன் ரோமியோ மற்றும் 33 வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் எனும் உடன் பிறந்த சகோதரர்கள் இருவரே படுகொலை செய்யப்பட்டனர்.

படுகாயமடைந்த இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களும்,காயமடைந்தவர்களும் மன்னார் உயிலங்குளத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களும், உறவினர்களும் என பொலிஸாரினால் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இந்த கொலையுடன் 17 பேருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் 5 பேர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (18.06) இரவு சட்டத்தரணிகள் ஊடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

இது வரை குறித்த கொலை சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply