இலங்கை மற்றும் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் “Mandous” சூறாவளி புயலின் தாக்கம் படிப்படியாக குறையும்” என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “Mandous” சூறாவளி புயல் நேற்று (09) இரவு 08.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 280km வடக்கு-வடகிழக்கே நிலைகொண்டிருந்தது. எனினும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை அண்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இன்றையதினம் காலையில் கடக்க வாய்ப்புள்ளது” என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதக்கவும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.