அரச துறையின் பாவனைக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஓவர்லாண்ட் ஓட்டோமொபைல் இன்ஸ்டிட்யூட் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு அவர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில், 2023 ஆண்டினை இலக்காகக் கொண்டு மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் உரிமம் வழங்க தீர்மானித்துள்ளதாகக் கூறினார். இது குறித்து மேலும் கருத்துத்தெரிவித்த அவர் ,
“வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் மீது கொண்ட அவநம்பிக்கை காரணமாக, நாட்டிற்கு டொலர்களை அனுப்பாமல், உண்டியல் போன்ற சட்டவிரோத முறைகள் மூலம் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புகிறார்கள்”.
“அந்த நடைமுறையை மாற்றும் வகையில், வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் திட்டத்தை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அமைச்சரவையில் இந்த பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, எல்லோரும் பூரண ஒப்புதல் அளித்தனர்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் ஒருவர், ஹைபிரிட் வாகனங்களை கொண்டு வருவதற்கும், பெற்றோல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கும், முன்மொழிந்ததாகக் கூறிய அமைச்சர் மனுஷ நாணயக்கார புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்துவதற்காக,
மின்சார வாகனங்களை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது என கூறியுள்ளார்.
