மக்கள் நிராகரித்த அழுக்கு அரசியலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.

அரசாங்கத்தின் பலவீனங்கள், இயலாமைகள் மற்றும் ஆற்றாமைகளை மூடிமறைப்பதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை அழிக்கும் சதியில் தற்போதைய அரசாங்கம் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாகவும், தற்போது பல்வேறு பொய்களை உருவாக்கி அந்த பொய்களை திரும்ப திரும்ப கூறி ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக ஊடகங்கள் மூலமாக பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

போராட்டத்தின் மூலம் மக்கள் கோரிய வரப்பிரசாதங்கள் சலுகைகள் இல்லாத அரசியல் கட்டமைப்பாக இருந்தாலும், தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் இந்தக் கோரிக்கைகளை புறக்கணித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை பணத்திற்கு விலைபேசும் சதியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே மக்கள் நிராகரித்த அந்த இலஞ்ச அரசியல் மற்றும் அழுக்கு, அசிங்க அரசியல் செய்யும் தரப்புகளுடன் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ கூட்டு சேராது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்களால் தீர்மானிக்கப்படும் மக்கள் ஆணையொன்றின் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்வோமே தவிர குப்பை குவியல்களுடன் இணைந்து கொண்டு செயற்படுவதற்கு எந்த வித தயாரும் இல்லை எனவும், இந்நேரத்தில் நாட்டுக்கான ஒரே பதில் ஐக்கிய மக்கள் சக்தியே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு உறுப்பினரும் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் எனவும், இவ்வாறான கலந்துரையாடல்கள் கட்சிக்குள்ளேயோ அல்லது கட்சிக்கு வெளியேயோ இடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக பரவி வரும் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையிலையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை மூலம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

மக்கள் நிராகரித்த அழுக்கு அரசியலுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணையாது.

Social Share

Leave a Reply