ஜனாதிபதி ரணில் மூலம் அராஜகத்தை அகற்றி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற தேசிய மொழி சமத்துவ மேம்பாட்டுத் திட்ட மாநாட்டில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அரச மொழிக் கொள்கையை விரைவாக அமுல்படுத்துவது பன்மொழி இலங்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை அதிகரிக்க உதவும் எனக் கூறினார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் துறைகளும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓராண்டுக்கு முன்பு இந்த இடத்துக்கு வெளியே மக்களிடையே அராஜக உணர்வு இருந்தது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மக்களின் ஆதரவுடன் நாட்டின் சட்டம் ஒழுங்கையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்க முடிந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மொழி திட்டத்திற்காக நிதியுதவி வழங்கிய கனடா அரசாங்கத்திற்கும் தனது நன்றியை தெரிவித்த கொண்ட பிரதமர், இந்த திட்டம் இலங்கையில் பன்மொழி மற்றும் பாலின அடிப்படையிலான தடைகள் தொடர்பான குறிப்பிட்ட சவால்களில் கவனம் செலுத்துவதற்கும் தீர்வு காண்பதற்கும் உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.