ஹெரோயின் கடத்திய தமிழ் குடும்பஸ்தருக்கு 06 வருடங்களின் பின் கிடைக்கப்பெற்ற தண்டனை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் கொண்டுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 06 வருடங்களின் பின் மரணதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (12.07) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையில் பொலிஸார், வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கொழும்பு நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரின் பஉடைமையில் பையில் இருந்து ஹெரோயின் கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் இருந்து தெரியவந்தது. இருப்பினும் குறித்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.

யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply