நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்,அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல்,மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேதமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்று (28.07) கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர் என்றும்,சிறிய மற்றும் நடுத்தர வர்த்த முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில்,ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு திருட்டு,மோசடி,ஊழல் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்த அவர், பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மக்களை அவலநிலையில் இருந்து காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும்,அப்புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாகவும்,மக்களின் கோரிக்கையான தேர்தல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்,மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது என வலியுறுத்திய அவர், அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும் என்றும், மக்கள் ஆணை எனும் மக்களினது நீதிமன்றத்திற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயார் நிலையில் இருப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.