திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள்

அண்மையில் வட மாகாண ஆளுனர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட திருமதி P.S M சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள அதேவேளை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் சுந்தரம் அருமைநாயகம் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப்படவுள்ளனர்.

நேற்று (26/10) குறித்த நியமனங்களுக்கான அனுமதியினை பாராளுமன்றப் பேரவை வழங்கியுள்ளது.

திரு.வி.சிவஞானசோதி அவர்களின் மறைவையடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நேற்றுமுன்தினம் (25) கூடிய பாராளுமன்ற பேரவை தனது இணக்கப்பாட்டை வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

திரு.சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து திரு.ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கும் பாராளுமன்ற பேரவை தனது இணங்கத்தை வழங்கியுள்ளது. இவர் இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார். இது தவிரவும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.

திருமதி சார்ள்ஸ், சுந்தரம் அருமை நாயகம் ஆகியோருக்கு  புதிய பதவிகள்

Social Share

Leave a Reply