லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தேவையான இன்சுலின் உள்ளது என்று மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் பரப்பப்படுகின்ற நிலையில், இது குறித்து இன்று (08.08) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரிட்ஜ்வே ஆர்யா மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போதுமான இன்சுலின் உள்ளது. கிளினிக்குகளுக்கு வரும் குழந்தைகளுக்கு போதுமான இன்சுலின் வழங்கும் திறன் எங்களிடம் உள்ளது.
தீவில் உள்ள எந்த மருத்துவமனையிலும் குழந்தைகளுக்கு இன்சுலின் தேவை இருந்தால், அதை வழங்கும் திறன் எங்களிடம் உள்ளது. மற்ற மருத்துவமனைகளுக்கும் இன்சுலின் அனுப்பும் வசதி உள்ளது. எனவே, உங்கள் குழந்தைக்கு இன்சுலின் தேவைப்பட்டால், தயங்காமல் மருத்துவமனைக்கு வாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடும் வறட்சியான காலநிலையினால் சிறுவர்களுக்கு நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், நீரிழப்பைக் கட்டுப்படுத்த, இயற்கையான பழச்சாறுகளைப் போல, முடிந்தவரை தண்ணீரைக் குடிப்பது நல்லது என்று மருத்துவர் கூறியுள்ளார்.