மத்திய மாகாணத்திற்கு நீரை தடையின்றி விநியோகிப்பது குறித்து கலந்துரையாடல்!

மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் நகர, கிராம பகுதிகளுக்கு வழங்கப்படும் நீர் இணைப்புகள் குறித்தும், நீர்வழங்கல், வடிகாலமைப்பில் உள்ள குறைப்பாடுகள் சம்பந்தமாகவும், சுகாதார பாதுகாப்பான நீரை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை பற்றியும் ஆராயப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே. இடையிலான கலந்துரையாடலொன்று கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி நீர்வழங்கல் குறித்து ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதற்கான தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் பற்றி பேசப்பட்டு, தீர்மானங்களும் எட்டப்பட்டுள்ளன எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது உள்ளுராட்சிசபைகளின் அதிகாரம், ஆளுநர் வசம் இருப்பதால், கண்டி, நுவரெலியாவில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் துறைசார் அதிகாரிகளிடம் இது பற்றி பேச்சு நடத்தி, மக்களுக்கு தடையின்றி நீரை வழங்குவதற்கும் இங்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, மத்திய மாகாண தமிழ்க் கல்வி பிரிவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு வழங்கப்படும் என்றும் ஆளுநர் தன்னிடம் உறுதியளித்தாக ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, புதிய கிராமங்கள் அதிகார சபையின் பணிப்பாளர் ரூபதரஷ்ன், நீர்வழங்கல் சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர் எனவும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply