அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியானது கடன் நெருக்கடிக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் எனக் கூறிய அவர், அனைத்து பெரிய சக்திகளும் கடன் பெற்றிருந்தாலும், ஒரு தேசத்தை நடத்துவதற்கான முக்கிய காரணி கடன்களை திருப்பிச் செலுத்தும் திறனாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பாரிய கடன்களைக் கொண்டிருக்கும் சில நாடுகள் என சுட்டிக்காட்டிய அவர், ஆனால் அந்நாட்டின் அரசாங்கங்களால் அவற்றை திருப்பிச் செலுத்த முடியும் என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் கவனம் என்றும் அதற்கமைவாக சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.