சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் கட்ட கடன் தொகையை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துளளார். பிரபஞ்சம் பஸ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாலயத்திற்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் வழங்கும் நிகழ்வில் நேற்று (28.09) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனை கூறியுள்ளார்.
அஸ்வெசும என்ற பெயரில் விஞ்ஞானபூர்வமற்ற, பயனற்ற திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு ஏழை மக்களைக் கூட அனாதைகளாக்கியுள்ளனர் என கூறிய சஜித் சிறுநீரகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பிரஜைகளுக்கு நிவாரணம் கூட வழங்க அரசாங்கத்துக்கு முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இவற்றுக்கு ஆட்சியில் உள்ள ஊழல்தான் காரணம் என்றும், இவர்களின் மிக மோசமான ஊழல் கொள்கை குறித்து சர்வதேச நாணய நிதியம் கூட கவலை வெளியிட்டுள்ளதாகவும், அரச வருவாய் இலக்குகளை அரசாங்கம் அடையத் தவறியதால், சர்வதேச நாணய நிதியம் கூட தனது இரண்டாம் கட்ட கடன் தொகை வழங்குவதையும் நிறுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் நாட்டின் தலைவர்கள் மாதந்தோறும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கின்றனர். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை, கியூபா, ஜேர்மனி மற்றும் பிற நாடுகளுக்கு இவ்வாறு சென்றார்கள். ஜனாதிபதி ஜேர்மனி சென்ற பிறகு ஐ.எம்.எப் இரண்டாவது கட்ட கடன் வசதியை வழங்குவது தள்ளிப்போகும் என்று கூறும்போதும் நிதியமைச்சரான ஜனாதிபதி நாட்டில் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் விமர்சித்துள்ளளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை கூட்டத்திற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களில், இரசானய உரக் கொள்கையைக் கொண்டு வந்து விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தவர்கள்,மொட்டுவின் அமைச்சுப் பதவி இல்லாத எம்.பி.க்கள்,தோட்ட மக்களின் வாக்குகளால் வந்து தோட்ட மக்களுக்கு எதுவும் செய்யாத எம்.பி ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், இது அரசியல் இலஞ்சம் என்றும் சஜித் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்து பயணங்களுக்குமான செலவுகளையும் நாட்டின் 220 இலட்சம் மக்களின் பணத்திலிருந்தே செலவளிக்கின்றனர் என்றும், நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஏற்படும் அனைத்து செலவுகளும் அரசாங்கத்தால் ஈடுசெய்யப்படுகின்றன என்றும், இந்த தூதுக்குழு விஜயங்களில், துறை சார் நிபுணர்களை அழைத்துச் செல்லாது, அமைச்சர்களை அழைத்துச் சென்று அவர்களை சந்தோசப்படுத்துவதையே தற்போதைய ஜனாதிபதி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
இன்று நமது நாட்டில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவுகிறது. நாட்டை ஆளும் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளை கொண்டு வந்து நாட்டை வங்குரோத்தாக்கி விட்டது. இதையெல்லாம் தாண்டி மக்களுக்கு ஏதேனும் வழங்க வேண்டும் என்றும், வரிச்சுமையினால் மக்கள் அவதியுறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் பொருளாதார பெறுகைகளை விரிவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பதிலாக சுருக்கி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. அசாதாரணமான முறையில் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடைந்து இயல்பு வாழ்க்கை கூட அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.
இதேவேளை நாட்டில் உணவுப் பாதுகாப்பு இல்லமால் போயுள்ளது. 65 சதவீதம் பேர் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 வேளை சாப்பிட்ட மக்கள் இப்போது 2 வேளை சாப்பிடுகிறார்கள். இதனால், குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறே,மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அதிக விலைக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலை இருந்தும் அரசாங்கம் மோசடி, இலஞ்சம்,பொய், ஊழல் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்றது. தரக்குறைவான மருந்துகளை கொண்டு வருவதனால் பலர் தங்களிடம் உள்ள தங்க பொருட்களை அடகு வைத்து, வீடு,சொத்துக்கள்,வாகனங்களை கூட விற்று பிள்ளைகளை படிப்பிக்கவும்,வாழ்க்கையை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையே இதற்கு பிரதான காரணம் என மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அரசாங்கத்தின் கொள்கை பொருளாதாரத்தை சுருக்குவதே என்றாலும் பொருளாதாரத்தை விரிவாக்குவதே நடக்க வேண்டியது என்றும், இது மேற்கொள்ளப்படாமையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வீழ்ச்சியடைந்தும், சுயதொழில் கூட வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
போட்டி முறை தவிர்ந்த டெண்டர் முறையி்ல் அவசர கொள்முதல் செய்யப்பட்டு,
தரம் குறைந்த மருந்துகளை கொண்டு வந்து, அவற்றிலிருந்தும் கொமிசன் கூட பெறப்படுவதாகவும், இவ்வாறு கொள்ளையடித்து பெரும் செல்வந்தர்களுக்கு வரம்பற்ற வரிச்சலுகைகளை வழங்கி, வரி அறவீடும் கூட சரியாக நடக்கவில்லை என்றும், நட்பு வட்டார முதலாளித்துவவாதிகள் வரி செலுத்தத் தவறிவிட்டனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தர்.
மதுபானம் விற்பனை செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு 1.7 பில்லியன் ரூபா வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது . நாடாளுமன்றக் குழுவுக்குக் அரசாங்க நிறுவன அதிகாரிகள் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனத்திற்கு எப்படி வரிச்சலுகை வழங்கப்பட்டது என்று கேட்டபோது “முதலீட்டாளர்களிடம் கேட்டு தெரிவிப்பதாக” கூறியதாகவும்,இது வெட்கக்கேடான பதில் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கூறினார்.
அரசாங்கத்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாவிட்டால் தேர்தலை நடத்துமாறும், சகல தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் வெளியிட்டார்.
பிரபஞ்சம் பஸ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை 50 இலட்சம் ரூபா பெறுமதியான 79 பாடசாலை பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக 395,000,000 ரூபா செலவிடப்பட்டுள்ளது. அவ்வாறே, பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 33 பாடசாலைகளுக்கு 290 இலட்சம் ரூபா பெறுமதியான வகுப்பறை உபகரணங்களும், மூச்சுத் திட்டத்தின் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் ரூபா பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.