கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் எற்பாட்டில் மட்டக்களப்பில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – கல்லடி 243 வது இராணுவ படைப்பிரிவின் பிறிக்கேட் கொமாண்டர் சந்திம குமார சிங்க தலைமையில் பாலமீன்மடு கலங்கரை விளக்கிற்கு (Light house) அருகாமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரெட்ண கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், சிறப்பு விருந்தினராக அம்பாரையிலுள்ள 24 வது படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்திர ஸ்ரீ கலந்து சிறப்பித்திருந்தார்.
பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்புஅதிதிகள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நடன கலைஞர்களின் வரவேற்பு நடனம் நிகழ்வை அலங்கரித்திருந்தது.
வரவேற்புரையினை தொடர்ந்து சிறுவர்களின் கண்கவர் நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து, அதிதிகளினால் நடை கலைஞர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிறார்களுக்கு விசித்திர பொம்மலாட்ட கலைஞர்களால் இனிப்பு வகைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், சிறார்களை மகிழ்விக்கும் முகமாக சிறுவர் பூங்காவில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், வினேத விளையாட்டுக்கள் மற்றும் இசை நிகழ்ச்சி என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






