தமிழ் மக்களின் அடையாளத்தை அழிக்க வேண்டாம் – ஜீவன்!

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயலாகும். எனவே, பதிவாளர் நாயகம் திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.” என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு சான்றிதழ் உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்குரிய ஆவணங்களில் “இனத்தைக் குறிப்பிடும் போது இந்திய தமிழ் / சோனகர் என்பதை இலங்கைத் தமிழ்/ சோனகர் என பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள்” எனும் தலைப்பின் கீழ் பதிவாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் தொடர்பில் நான் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் இது சம்பந்தாக ஜனாதிபதி மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரான, பிரதமர் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், ” பதிவாளர் நாயகத்தின் யோசனையுடன் தாம் உடன்படவில்லை எனவும், எமது மக்களுக்கு 200 வருடகால அடையாளம் உள்ளதுடன் 200 ஆவது வருடத்தில் எமது அடையாளத்தை அழிப்பதற்கு முற்படுகின்றனர். இதனை ஏற்க முடியாது. இது சம்பந்தமாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வை பெற முற்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் போரிடவும் இல்லை, தனி நாடு கோரவும் இல்லை. தனி அடையாளத்தை தான் கோருகின்றனர். அதனையும் அழிக்க முற்படுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. இலங்கை தமிழர் என பதிவு செய்தால் அது பெரும் அநீதியாக அமைந்து விடும். 30 வருடங்கள் பிரஜா உரிமை இல்லாமல் வாழ்ந்தோம், எமது தொழிலாளர்கள் அடிமைகள் போல் வழி நடத்தபபடுகின்றனர், தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கான நகர்வுகளும் இல்லை எமக்கு எமது அடையாளம் வேண்டும். எனவே, மேற்படி யோசனையை ஆதரிக்க முடியாது. அதனை எதிர்ப்போம். என அமைச்சர் ஜீவன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply