மட்டக்களப்பில் சுமுகமாக இடம்பெறும் உர விநியோகம்!

நாட்டின் விவசாய உற்பத்திற்குப் பங்களிப்புச் செய்யும் பிரதான இடங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாவட்டத்தில் 2023/2024 காலப்பகுதிக்கான உர விநியோகம் சுமுகமாக இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் இம்முறை பெரும்போக மானியத்தை பணமாக இரண்டு தடவைகளில் விவாசயிகளுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் உர மானிய விநியோகம் சுமுகமாகக் காணப்படுவதை அவதானிக்கலாம்.

இப்போகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 72,317.82 ஹெக்டயர் நிலப்பரப்பில் விவசாயம் செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஹெக்டயருக்கு தலா 15,000/- ரூபா உரமானியத் திட்டத்தின் கீழ் இதுவரை 68,654.58 ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 19,180 விவசாயிகளுக்கான உர மானியம் கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இவ்வுர மானியத்திலிருந்து விவசாயிகள், மாவட்டத்திலுள்ள 17 கமநல சேவைகள் நிலையங்களிலும் மற்றும் விநியோகத்தர்களிடமிருந்தும் உரத்தைக் கொள்வனவு செய்து கொள்ளலாம்.

அத்துடன் சிலோன் உரக் கம்பனி, கொழும்பு கொமர்ஷியல் உரக் கம்பனி, சி.ஐ.சி குழுமம், பஅர்ஸ் (Baurs), ஹேலீஸ், அக்ஸ்ட்ரோ, டிமோ, லக் கொவிஜன, கோல்டன் பூட் அக்ரோ, கங்காரா போன்ற விற்பனையாளர்கள் அவர்களின் விநியோகத்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம் என கமநல சேவைகள் அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வருடாந்தம் செப்டம்பர் முதல் பெப்ரவரி மாதம் வரை பெரும் போகமாகவும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சிறு போகமாகவும் நெற்செய்கை இடம்பெறுவதுடன் உர மானியமும் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது.

Social Share

Leave a Reply