நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண மற்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கட்சித் தலைமையகத்திற்கு
இன்று (30) அழைக்கப்பட்டிருந்த நிலையில் செயற்குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளதுடன்
குறித்த பதவிக்கு மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி. குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாளர் பதவியிலிருந்து இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண நீக்கப்பட்டுள்ளதுடன் அந்த பதவிக்கு மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் மஹிந்த அமரவீர சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள
நிலையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.