படைவீரர்களுக்கு பாராபட்சம் காட்ட வேண்டாம் – சஜித்

மேடைகளில் விசித்திரமான கதைகளை கூறி தீர்வு, பதில் என்று கனவு உலகில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ வீரர்களது மாத்தளை மாவட்ட மாநாடு இன்று(06) மாத்தளை நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,

யார் என்ன பதில்கள், மாற்று வழிகள், தீர்வுகளை காட்டினாலும் டொலரும் ரூபாயும் இன்றி எந்த தீர்வையும் நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது.

76 வருட கால ஜனநாயக வரலாற்றில் நாட்டிற்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே, எனவே இனிமேலும் பொய்களுக்கு பின்னால் சென்று, பொய்யான பரப்புரைகளை நம்பி ஏமாற வேண்டாம்.

அவ்வாறு நடந்தால் இப்போது இருக்கும் இடத்தை விட மேலும் மோசமான இடத்திற்கே நாடு செல்லும்.

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கும் அரசாங்கத்தை ஆட்சி பீடமேற்ற ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளான படைவீரர்களின் போராட்டத்தின்போதும் நானும் அங்கு சென்று படைவீரர்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்த விடயங்களை புரிந்து கொண்டேன்.

மகிந்த ராஜபக்சவும், கமல் குணரத்னவும் கூட அந்த இடத்திற்கு வருகை தந்தனர். நான் வழங்கிய வாக்குறுதிகளை பொருட்படுத்ததாது மகிந்த ராஜபக்சவும், கமல் குணரத்னவும் சொன்னதையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தற்போது அதன் பெறுபேறுகள் கிடைத்து வருகின்றன, அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தற்போது பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் ஊடாக அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் உரிமைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றிய இராணுவ வீரர்களுக்கு அரசாங்கம் மாற்றாந்தாய் கவனிப்பையே காட்டி வருகிறது. இது உடனடியாக மாற வேண்டும், 34000 சிவில் பாதுப்பு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தலா 30 இலட்சம் வீதம் வழங்கி சேவையில் இருந்து நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாட்டில் பல்வேறு நிதிப்பிரச்சினைகள் இருந்தாலும், 30 வருட கால யுத்தத்தை வெற்றியுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு பாடுபட்ட இராணுவ வீரர்களை மறக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இராணுவ வீரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட காணியில் இருந்தும் பணம் அறவிட ஆரம்பித்துள்ளனர்.

யுத்த காலத்திலும், யுத்தத்திற்கு பின்னரான ஆரம்பக் கட்டங்களிலும் இராணுவ வீரர்கள் உயர்வாகக் கருதப்பட்டனர்.

இராணுவத்தினருக்கு இலவச காணி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், இராணுவத்தினர் செய்த சேவையை மறந்து அந்த காணியில் வீடுகளை கட்டிய இராணுவ வீரர்களுக்கு காணியின் பெறுமதியை வழங்குமாறு கோரி கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டு மக்களுக்கு இடத்துக்கான உறுதிப்பத்திரங்களை வழங்கி வரும் அரசாங்கம் இராணுவ வீரர்களின் இடத்துக்கான உரிமையை உறுதிப்படுத்தாது விட்டுள்ளது.

இலவசமாக வழங்கி வைத்த காணிகளுக்கு பணம் அறவிடுவது வெட்கக்கேடான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தினர் குறைக்கப்பட்டால், அவர்களுக்கான மாற்று வருமான மூலங்கள் வழங்கப்பட வேண்டும்.

இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்று சமூகத்தில் பேசப்பட்டாலும் , நாடு வங்குரோத்தடைந்தமைக்கு பிரதான காரணம் இராணு வீரர்களால் அல்ல, பொருளாதார பயங்கரவாதிகள் தான் பிரதான காரணம்.

இவ்வாறான தீர்மானங்களை எடுப்பதற்கு முன்னர் இந்த இராணுவ வீரர்களுக்கு மாற்றுத் தொழிலும், வருமான ஏற்பாடுகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார பயங்கரவாதிகள் நாட்டை வங்குரோத்தடையச் செய்துள்ள பின்னனியில், பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கின் கீழ் நாட்டின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும் நேரத்தில், நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை பாதுகாக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற படைவீரர்களை கூட அவர்களை தொழில்முனைவோராக மாற்றும் வேலைத்திட்டத்தை எமது ஆட்சியில் மேற்கொள்வோம். படை வீரர்களின் நலனுக்காக தனியான திணைக்களத்தை எமது ஆட்சியில் நிறுவுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Social Share

Leave a Reply