இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோவ் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
லக்னோவ் மைதானத்தில் இன்று(07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோவ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, லக்னோவ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
லக்னோவ் அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ஓட்டங்களையும், கே.எல். ராகுல் 33 ஓட்டங்களையும், நிக்கோலஸ் பூரன் 32 ஓட்டங்களையும் மற்றும் ஆயுஷ் பதோனி 11 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
குஜராத் அணி சார்பில் பந்து வீச்சில் உமேஷ் யாதவ் மற்றும் தர்ஷன் நால்கான்டே தலா 2 விக்கெட்டுகளையும், ரஹித் கான் ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர்.
164 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
அதன்படி, இந்த போட்டியில் லக்னோவ் அணி 33 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
குஜராத் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களையும் ராகுல் திவட்டியா 30 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர்.
லக்னோவ் அணி சார்பில் பந்து வீச்சில் யாஷ் தகூர் 5 விக்கெட்டுகளையும், குர்னல் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றிக் கொண்டனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக லக்னோவ் அணியின் யாஷ் தகூர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக ஐ.பி.எல் தொடரின் தரவரிசைப் பட்டியலில் சென்னை அணியை பின்தள்ளி லக்னோவ் அணி 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் அணி 4 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் தொடர்ந்தும் 7ம் இடத்தில் உள்ளது.
மேலும், ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 1ம் இடத்திலும், கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் காணப்படுகின்றது.
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நாளைய(08) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை எம். சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.