மன்னார் – விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று(18.06) உத்தரவிட்டது.
வனஜீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் உட்பட பல தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மத்திய ஆசிய வான்பரப்பில் தெற்கு பயணப் பாதையில் வருடாந்தம் 15 மில்லியன் பறவைகள் சஞ்சரிக்கும் முக்கிய கேந்திர பகுதியாக இலங்கை காணப்படுவதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திற்கு பருவ காலத்தில் சுமார் ஒரு மில்லியன் பறவைகள் வருவதாகவும், இந்த பாதையில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், பறவைகளின் நடமாட்டத்தில் இடையூறு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றாலை திட்டத்திற்கு மன்னார் தீவை தெரிவு செய்வதற்கு விஞ்ஞான ரீதியான அல்லது வேறு விசேட காரணம் எதுவும் இல்லை எனவும், குறித்த நிலப்பரப்பு மிகவும் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் பிரதேசம் எனவும் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.