கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அச்சிடும் செலவுகள் மூன்று மடங்கால் அதிகரிக்கக்கூடும் என அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்தமை மற்றும் அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கை உயர்வடைந்தமையே இதற்கான காரணம் என
அரச அச்சகர் கங்கா கல்பனீ லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதுடன் தொடர்புடைய ஏனைய செலவுகளும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, இம்முறை ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுவதாக அரச அச்சகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டு 27 அங்குலம் நீளம் கொண்டதாக காணப்பட்டது. இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாயின், வாக்குச்சீட்டின் நீளமும் அதிகரிப்பதுடன் செலவுகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்துமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.