
மன்னார், தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (09.08) வெள்ளிக்கிழமை இலவச உடல் வலுவூட்டல் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளின் உடல்,உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உடற்பயிற்சி நிலையத்தை நிறுவியுள்ளதாகவும், இதன்மூலம் எவ்வித கட்டணங்களுமின்றி மன்னார் இளைஞர், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைய முடியும் எனவும் மன்னார் மாவட்ட தேசிய படையணி நிலையப் பொறுப்பதிகாரி கப்டன் சர்ராஜ் தெரிவித்தார்.
மன்னார் தேசிய இளைஞர் படையணியின் 2024 ஆம் ஆண்டின் முதலாவது பிரிவு மாணவர்களின் ஆறுமாத காலப் பயிற்சி பூர்த்தியடைந்த நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மன்னாரில் நடைபெற்ற வேளையிலேயே, குறித்த இலவச உடல் வலுவூட்டல் நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் படையணியின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி சர்ராஜின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலாளர் க. கனகேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு, சிறப்பு விருந்தினர்களாக தேசிய இளைஞர்,படையணியின்,மாகாணப் பணிப்பாளர் கேணல் அமின லியனகே மாவட்டச் செயலகத்தின் அனர்த்தமுகாமைத்துவ அலுவலர் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் படையணி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்