
நாட்டின் பொது மக்களை புறக்கணிக்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொறுப்பை தமது கட்சி ஏற்கும் என
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அரசியல் தீர்மானத்தை நாங்கள் ஒருபோதும் எடுக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த நாட்டின் அபிவிருத்தியை நிறுத்திய இடத்திலிருந்து எவ்வாறு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்பதே எனது பொறுப்பும் சவாலும்.
இன்று சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் வரம்பற்ற மற்றும் நியாயமற்ற வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.
கோட்டாபயவின் அரசாங்கம் வரிகளைக் குறைத்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டோம்.
இந்த நாட்டு மக்களுக்கு தாங்கிக்கொள்ளக்கூடிய வரிக் கொள்கையை அமுல்படுத்த வேண்டும் என்று நாங்கள் இன்னும் நம்புகிறோம்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். கிராம பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.
இந்த நாட்டின் பொருளாதாரத்தை உங்களுக்காக கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது” என்றார்.