
பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட, தொகுதி, பிரதேச, கிராமிய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் ,மாவட்ட இளைஞர் அணி, மகளிர் அணியுடனான விசேட கலந்துரையாடல் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் கலந்து கொண்டார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு கூடி ஏகமானதாகத் தீர்மானித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
களுதாவளை விளையாட்டு மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, களுதாவளை கிராமிய குழு தலைவர் பார்த்தீபனால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் , பின்னர் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக மயிலத்தமடு மாதவனைப் பண்ணையாளர் பிரச்சினைக்கான தீர்வினையும், அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான தீர்வினையும், ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான பிரதான சூத்திரதாரியினையும் , அதனோடு தொடர்புடைய சகலரையும் கைது செய்து நீதியை நிலைநாட்டுவதோடு, பிள்ளையான் போன்ற கொலையாளிகளும் கைது செய்ய வேண்டும் எனவும், வாகரை இல்மைற் அகழ்வுடன் தொடர்புடைய காணி திருடர்கள், சட்டவிரோத மணல் கடத்தல் கார கும்பல் உட்படப் பல கள்வர்கள், மட்டக்களப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்தார்.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் காணப்படும் தமிழர்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வையும், கொலையாளிகள் கள்வர்கள் மற்றும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் தமது அரசாட்சியில் நிறைவேற்றப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தான் அமைச்சராகக் கடமையை ஏற்று இருந்த காலப்பகுதியில் நிறைவு செய்யப்படாமல் இருக்கின்ற அனைத்து வீட்டுத் திட்ட வேலைகளையும் ஒரு மாத காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறையில் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபை முதல்வர் சரவணபவன், மட்டக்களப்பு மகளிர் அணித் தலைவி ரஞ்சினி கனகராசா, அம்பாறை இளைஞரணி பொதுச் செயலாளர் நிலாம்சன் உட்பட இலங்கை தமிழரசு கட்சியினுடைய மாவட்ட, தொகுதி, மத்திய, பிரதேச, கிராமிய குழு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி, மகளிர் அணி பிரதிநிதிகள் இலங்கைத் தமிழர் கட்சியினுடைய ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.