மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக போராடிய அரசியல் போராளி-ப.சத்தியலிங்கம்

மாவை தமிழினத்தின் அரசியல் விடிவிற்காக போராடிய அரசியல் போராளி-ப.சத்தியலிங்கம்

சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக இறுதிவரை போராடிய ஒரு உன்னதமான போராளி அமரர் மாவை சேனாதிராஜா என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், மூத்த அரசியல்வாதியும், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜாவின்; மறைவையொட்டி கட்சியின் பொதுச்செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவை அண்ணர் என்று அனைவராலும் வயதுவித்தியாசமின்றி அன்பாக அழைக்கப்பட்டவர் மாவை சோ.சேனாதிராஜா. யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த மாவிட்டபுரத்தில் பிறந்த சோ.சேனாதிராஜாஅவர்கள் ஊரின் பெயருக்கு பெருமைசேர்த்தவராக மாவை சேனாதிராஜா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். 1961ம் ஆண்டு; தமிழ் மக்களுக்கு எதிரான அரசின் அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகதலைவர் தந்தை செல்வா அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்து போராடியதோடு அன்னாரது அரசியல் பயணம் ஆரம்பமாகியது. இறுதி மூச்சுவரை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக ஐனநாயக ரீதியில் போராடியவர் மாவை சேனாதிராஜா.

1962ம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்து முழுநேரஅரசியல் பயணத்தை ஆரம்பித்த மாவை சேனாதிராஜா அவர்கள் 1966 முதல் 1969 வரையில் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தில் செயலாளராகவும் 1972ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் துடிப்புடன் செயற்பட்டவர். 1989ல் முதன்முறையாக பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து 2020 வரையில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக பாராளுமன்றத்தில் ஐனநாயக வழியில் குரல் கொடுத்தவர். தனது அரசியல் பயணத்தில் பலதடவை சிறைவாசம் சென்றதுடன் தேர்தல் காலங்களில் அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையிலும் அரசியல் பணிகளை முன்னெடுத்த மாபெரும் தலைவர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் மறைவுக்கு பின்னர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்து கட்சியை வழிநடாத்தியவர். 2004 ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையில் கட்சியின் செயலாளராக 10 வருடங்கள் பணியாற்றியதுடன், 2014ம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் 2024ம் ஆண்டுவரையில் ஏறத்தாள 10 வருடங்கள் கட்சியின் தலைவராக வழிநடாத்தியவர்.

அன்னாரின் இழப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு பாரிய இழப்பாகும். அன்னாரின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Social Share

Leave a Reply