இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
தற்போது இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு விழா இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் 06 ஆம் திகதி பிரதமர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அங்கு புனித மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடவுள்ளார்.
இந்திய பிரதமர் மோடி இறுதியாக 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
பிரதமர் மோடியின் இலங்கை விஜயம், இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக அமையும் எனவும் இந்தியாவின் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்த பயணம், இலங்கையுடனான நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.